Tuesday, March 17, 2009

குடிகார செல்லனும், குலதெய்வம் நயன்தாராவும்!



குடிகாரர்கள் விசித்திரமானவர்கள்! எங்கள் கிராமத்தில் நான் சிறுவயதில் பார்த்த செல்லனில் துவங்கி, சென்னையில் நான் பார்த்து பழகிய குடிகாரர்கள் அனைவருக்கும் குடிப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

எனக்கு தெரிந்த வி.ஐ.பி நண்பர் ஒருவர், "சார் நான் இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்கேன். கண்டிப்பா டிரிங்ஸ் அடிக்கணும்"னு குவார்ட்டரை உள்ளே தள்ளுவார். அதே நண்பரை மறுநாள் சந்திக்கும்போது, "ஒரு சின்ன பிரச்சனை. கவலையா இருக்கேன். ஏதாவது சாப்பிடலாமா" என்பார். இவர் சாப்பிடலாமா என்று கேட்பது குவார்ட்டரை தவிர வேறென்ன? சந்தோஷமும், கவலையும் இல்லாத மத்திமமான சூழல் மறுநாள் வந்தே தொலையும். "ரொம்ப போரடிக்குது சார். கொஞ்சமா சாப்டா நல்லாயிருக்கும்லே" என்பார். இந்த மூன்று சூழ்நிலைகளை தவிர மனுசனுக்கு வேற ஏதாவது வரப்போகுதா என்ன?

செல்லனுக்கு, குடித்துவிட்டு சைக்கிளில் ஏறுகிற வரைதான் பிரச்சனை. பெடலில் கால் வைக்கிறேன் என்று ஒரு நு£று முறையாவது சூன்ய வெளியில் காலை விடுவார். பெரிய போராட்டத்திற்கு பிறகு சைக்கிளில் ஏறிவிட்டால் மிச்சத்தை வேகமாக வீசுகிற காற்றே பார்த்துக் கொள்ளும். அவ்வளவு ஸ்டிராங்காக இருப்பார் மனுசன். நயன்தாரா எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்திச்சே, அது மாதிரி செல்லன் எடைக்கு எடை கொடுப்பதாக வேண்டிக் கொண்டால், ஒரு தட்டில் இவரையும் இன்னொரு தட்டில் ஒரு சீப்பு வாழைப்பழத்தையும் வைத்தால் போதுமானதாக இருக்கும்! கடந்த முப்பது வருஷமா அவரு இப்படிதான் இருக்கார். எப்பவாவது ஊருக்கு போனால் செல்லன் எப்டியிருக்காரும்பேன். "அவனுக்கென்ன... நல்லாதான் இருக்கான் குடிகாரப்பய"ன்னு சொல்லும் அம்மா! எனக்கு தெரிந்து குடிகாரர்களுக்குதான் ஆயுள் அதிகமாக இருக்கிறது.

நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஐபி கொடுத்த பார்ட்டி அது. நாங்களெல்லாம் ரொம்ப மதிக்கிற மனுஷன் அவர். பார்ட்டி கொடுத்தவரும் நாங்க ரொம்ப மதிக்கிற நபர். பேர சொல்லக்கூடாதான்னு கேட்காதீங்க. அப்புறம் அவங்க முகத்தை குவார்ட்டர் அடிச்சுட்டுதான் தைரியமா எதிர்கொள்ள முடியும், தேவையா அது?

பேச்செல்லாம் முடிஞ்சு, கடையை (பாரை) ஒப்பன் பண்ணுகிற நேரம். 'ப்ளீஸ் ஜாய்ன் த காக்டெயில் பார்ட்டி'ன்னு இங்கிலீஷில் அன்பொழுகி மேடையில் இருந்து கீழே இறங்கிட்டாரு விஐபி. மொத்த கூட்டமும் கடையை சூழ்ந்து கொண்டது. நான் சொன்னனே பெரிய மனுசன். திடீர்னு அண்டர்வேரோடு நிக்கிறாரு. கிளாசை கையிலே எடுக்குறதுக்கு முன்னாடியே போதையா? தடுமாறிப்போன விஐபி, அண்ணே, எண்ணன்னே இது?" ன்னு கேட்டாரு. அதுக்கு நம்ம ஆளு சொன்ன பதில்தான் உலகமே கவனிக்க வேண்டிய பண்பாடு!

"இல்லே தம்பி, நான் குடிச்சுட்டேன்னா அங்கங்க வேட்டிய தவற விட்டுர்றேன். வீட்டுக்கு போனா ஒங்க அண்ணி திட்றா. அதான், மடிச்சு பையிலே வைச்சுருக்கேன்" என்று பேக்கை ஓப்பன் பண்ண, குப்புன்னு காது அடைக்கிற மாதிரி சிரிச்சாங்க எல்லாரும். எனக்கு தெரிஞ்சு அதிகம் 'நாய்ஸ் பொல்யூஷன்' வருகிற இடம் 'பார்' மட்டும்தான்!

2 comments:

Sridhar said...

ithile ethum ulkuththu illaye?????????????

Sridhar

ARASIAL said...

அந்தணன்... நம்ம டிஆர் எபிசோட் அப்படியே நிக்குது.

அவரோட பராக்கிரமங்களை முழுசா சொல்லணும்ல... அண்ணன் கோச்சுப்பாரு... உங்க ரசிக சிகாமணிங்க வேற கடுப்பாயிடுவாங்க...

சீக்கிரம் 2-வது எபிசோடுக்கு வாங்க!

ஷங்கர்